TamilsGuide

பொங்கலன்று விஜய் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்த உச்ச நீதிமன்றம் - ஜன நாயகன் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

ஜன நாயகன் திரைப்படத்திற்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்கவேண்டும் என படக்குழு உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடர்ந்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா, படத்திற்கு 'U/A 16+' சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. அந்த அவசர மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனிநீதிபதி உத்தரவிற்கு தடை விதித்தது.

இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தயாரிப்பு நிறுவனம் சார்பில், படத்திற்கும் போதுமான விளம்பரங்கள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. 3 மாத்ததிற்கு பிறகு படத்தை பார்க்க மக்கள் தயாராக இருக்கமாட்டார்கள். எனவே இருநீதிபதிகள் தீர்ப்புக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும், தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைக்கேட்ட நீதிபதிகள் உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் உங்கள் வாதங்களை உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கலாம் எனவும் தெரிவித்தனர். இதன்படி முன்பு உயர் நீதிமன்றம் குறிப்பிட்டவாரே ஜன.21 -ல் உயர் நீதிமன்றத்தில் ஜனநாயகன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.
 

Leave a comment

Comment