TamilsGuide

அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ தளத்திலிருந்த வீரர்களுக்கு பறந்த உத்தரவு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், கட்டாரில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ தளத்திலிருந்து வீரர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டாரில் உள்ள அல்-உடைத் (Al-Udeid) தளத்திலிருக்கும் சில அமெரிக்கப் பணியாளர்கள் இன்று இரவே அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது மத்திய கிழக்கிலேயே அமெரிக்காவிற்குச் சொந்தமான மிகப்பெரிய இராணுவ தளமாகும்.

கடந்த ஆண்டு ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் இந்தத் தளத்தின் மீது ஏற்கனவே தாக்குதல் நடத்தியிருந்தது. இது குறித்து அமெரிக்கத் தூதரகம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

வழக்கமாக தூதரகம் மௌனமாக இருந்தால், அது ஒரு ஒத்திகையாக இருக்க வாய்ப்பில்லை என இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன. கடந்த ஜூன் மாதம் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், அமெரிக்கா இதேபோல அமைதியாகத் தனது வீரர்களை வெளியேற்றியது.

தற்போது அதே போன்ற சூழல் நிலவுகிறது. தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் இலக்குகளாக்கப்படும் என்று ஈரான் ஏற்கனவே எச்சரித்துள்ளது.

தற்போது வரை எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை என்றாலும், மிகப்பெரிய இராணுவ நகர்வுக்கான முன்னேற்பாடாக இது பார்க்கப்படுகிறது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 

Leave a comment

Comment