புதிய தலைமுறை இன்றைய பதிவு எழுத்தாளர் ஜா. தீபா பார்வையில் படையப்பா விவாதம்
இந்நிலையில், படையப்பா படம் குறித்த விவாதங்கள் குறித்து எழுத்தாளர் ஜா.தீபாவிடம் கேட்டோம். அவர் விரிவாக அதில் உள்ள தர்க்க உரையாடலை விளக்கினார்.
“படையப்பா மாதிரியான படங்கள் வெளியான காலக்கட்டத்தில் இருந்து நீண்ட தூரம் நாம் பயணித்து இன்றைய காலச்சூழலுக்கு வந்திருக்கிறோம். கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து படையப்பா ரீ ரிலீஸ் ஆகியிருக்கிறது. ரஜினி , சிவாஜி, ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து என பெரும் ஆளுமைகள் சேர்ந்து உருவான படையப்பா திரைப்படம் மிகப்பெரிய ஹிட்.. அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.
நீலாம்பரி மாதிரி ஒரு கதாப்பாத்திரம்.. அதற்கு நேரெதிரான அடக்கமே உருவான வசுந்தரா கதாப்பாத்திரம்.. இம்மாதிரி பல்வேறு படங்களிலும் காதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அமைதியான, அடக்கமான கதாப்பாத்திரம் என்றால் நாயகியாக இருப்பார். அதற்கு நேரெதிராக தான் விரும்பும் எதையும் அடைந்தே தீருவேன், அதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என்று நினைக்கும் பெண் எதிர்மறை குணாதியசங்கள் கொண்டவராக காட்டப்பட்டிருப்பார். இவர்கள் இருவரில் அமைதியான பெண்ணையே கதாநாயகன் உயர்த்திப் பேசுவார். மற்றொரு பெண்ணை அவமானப்படுத்துவதையும் நாம் பார்த்திருக்கிறோம். முன்னதாக சிவாஜியின் படங்களில் இதுபோல் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அவர் கடுமையாகப் பேசாமல் பெண்களுக்கு அறிவுரை சொல்லுவார். கமல், விஜயகாந்த் என பல நடிகர்கள் இது போன்ற படங்களில் நடித்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் பெண்களுக்கு பாடம் எடுக்கும் ஹீரோக்கள்..!
திமிரு பிடித்த பெண்ணை அடக்குவது கதாநாயகனின் லட்சியம் என்று நினைத்துக்கொண்டு பல நடிகர்கள் இம்மாதிரியான படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால், படத்தில் சில காட்சிகள் அம்மாதிரி வரும். படையப்பாவில் கதைக்களமே அதுதான். இருவருக்குமான மோதலும், உரசலும்தான் கதையே என்பதால் நீலாம்பரி கதாப்பாத்திரம் மனதில் நின்றுவிட்டது. அக்கதாப்பாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதமும் இன்றுவரை பேசுபொருளாக இருப்பதற்குக் காரணம்.
இதில் சௌந்தர்யா கதாப்பாத்திரம் என்பது படிக்காத, எப்போதும் குனிந்த தலை நிமிராத, ஆண்களைப் பார்த்தாலே பேசாத சாதாரணப் பெண். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ஏழ்மையான, இன்னொரு வீட்டில் வேலை பார்க்கக்கூடிய பெண். எவையெல்லாம் ஒரு பெண்ணின் அடக்கம் என்று நாம் சொல்கிறோமோ அதன் மொத்த வடிவம் அந்தப்பெண்.
மறுமுனையில் நீலாம்பரி மாடர்ன் உடைகளை அணிந்திருப்பாள். உயர் ரக கார் வைத்திருக்கும் ஒரு பெண். அவள் சொல்வதை வீட்டில் உள்ள அனைவரும் கேட்பார்கள். மிக முக்கியமாக வெளிநாட்டில் படித்துவிட்டு வந்து நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசக்கூடிய ஒரு பெண். கடந்தகால சினிமாக்களில் அடக்கமில்லாமல் ஒரு பெண் இருப்பதற்கு எவையெல்லாம் காரணமாக சொல்லப்பட்டதோ அவையெல்லாமும் சேர்ந்ததுதான் நீலாம்பரியின் கதாப்பாத்திரம். அந்தப்பெண்ணுக்கும் ரஜினி அறிவுரை சொல்கிறார். “அதிகமாக ஆசப்படுற ஆண்.. அதிகமாக கோபப்படுகிற பெண்” என்கிறார். பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று அவர் நினைப்பதன் வெளிப்பாடுதான் அது.
இதை ரஜினி செய்யலாமா என்று கேட்டால்... இத்தனை நாட்கள் வில்லன்களிடம் சிக்கியிருக்கும் பெண்களைக் காப்பாற்றி அழுத்துப்போயிருக்கும் சினிமாவில், ஒரு பெண்ணையே எதிர்க்கலாமே? வலிமையான ஒரு பெண் நமக்கு எதிரியாக இருந்தால் எப்படியிருக்கும்? அந்தப் பெண்ணை நாம் வெற்றி கொள்வது என்பது ரசிகர்கள் மனதில் எப்படி நிலைபெறும் என்று நினைத்துதான் நீலாம்பரி கதாப்பாத்திரத்தை அவர்கள் வைத்திருக்க வேண்டும். தற்போதைய காலக்கட்டத்தில் இம்மாதிரியான கதைகளையும் கதாப்பாத்திரங்களையும் வடிவமைக்க முடியுமா என்ற கேள்வி எழலாம். படையப்பாவிற்குப் பிறகும் சில இயக்குநர்கள் அதை முயற்சித்தார்கள்.
பெண்கள் இப்படித்தான் (அடக்கமான, அமைதியான) இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்த தமிழ் சினிமா.. பெண்கள் இப்படி இருந்தால் (தனக்கு என்ன வேண்டும் என்று புரிதல் இருக்கிற) அது சிக்கல், நல்லதல்ல என்று சொல்லக்கூடிய இடத்திற்கு வந்திருக்கிறது” என்றார்.
இதனை ஏன் நாம் பேச வேண்டிய சூழல் வந்திருக்கிறது என்றால் ஆண் பாவம் பொல்லாதது என்று படம் எடுக்கும் நிலைக்கும் சிலர் வந்திருக்கிறார்கள் என்பதுதான். நம் சமூகத்தில் பெண்கள் எந்த நிலையில் இருந்து இன்றைக்கு எந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள், அந்த முன்னேற்றம் எல்லாம் எப்படி மெல்ல மெல்ல நடந்திருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே. விதிவிலக்காக சில இடங்களில் நடக்கக் கூடியது பொதுப்படையாக வைத்து பெண்கள் சுதந்திர உணர்வையே கொச்சைப்படுத்தும் அளவிற்கு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய சூழலில் சில விஷயங்களைப் பற்றி பேசியே ஆக வேண்டியிருக்கிறது. சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.
ரஜினி படங்களுக்கு இன்னும் அழுத்தமாக பேசியே ஆக வேண்டியிருக்கிறது. மன்னன்படத்தில் விஜய சாந்தி கதாபாத்திரத்திற்கு எதிராக ரஜினி பேசிய வசனங்களை மீண்டும் திரும்பி பார்த்தால் அது புரியும். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தங்கமகன் படத்தில் வரும் பூ மாலை பாடல் மிகப் பொருத்தமான உதாரணம். நடனப்போட்டியில் ஹீரோயினை ஹீரோ வெல்வார். நடன திறமையால் அல்ல. ஆடைகள் இல்லாமல் யாரால் இருக்க முடியும் என்பதை வைத்து. எவ்வளவு அபத்தமான காட்சி இது. இதையும் நாம் கைதட்டிதான் கொண்டாடி இருக்கிறோம். அதனால், நாம் கொண்டாடிக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய அபத்தமான காட்சிகளை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
முடிவாக....
படையப்பா என்பது வெறும் ஒரு ரஜினிகாந்த் படம் அல்ல. அது ஒரு காலகட்டத்தின் சமூக மனநிலையை பிரதிபலிக்கும் ஆவணம். அந்த காலத்தில் ‘கொண்டாடப்பட்ட’ வசனங்களும் காட்சிகளும், இன்றைய பார்வையில் கேள்விக்குள்ளாகின்றன என்றால் அதுவே சமூகத்தின் வளர்ச்சிக்கான அடையாளம். விமர்சனம் என்பது ஒரு படத்தை நிராகரிப்பதற்கல்ல; அதை மீண்டும் மறுபரிசீலனை செய்து சிந்தனையில் மாற்றம் செய்து கொள்வதற்குதான்.
நீலாம்பரி கதாபாத்திரம் எதிர்மறை தன்மைகளுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது விவாதத்திற்குரிய விஷயமல்ல. ஆனால், அந்த எதிர்மறையை விமர்சிக்கும் பெயரில் ஒரு பெண்ணின் ஆளுமையே குற்றமாக்கப்படும் போதுதான் பிரச்னை தொடங்குகிறது. அதிகமாக ஆசைப்படுவது ஆணுக்கு ‘துணிச்சல்’ ஆகவும், பெண்ணுக்கு ‘அடங்காத தன்மை’ ஆகவும் மாற்றப்படும் இடத்தில்தான் ஆணாதிக்க சிந்தனை வெளிப்படுகிறது. நீதிபோதனை என்றால் அது பாலின வேறுபாடின்றி பொதுவாக இருக்க வேண்டும்.
இன்றைய காலத்தில் இப்படியான வசனங்கள் கேள்விக்குள்ளாகின்றன என்றால், அது ரஜினிகாந்த் அல்லது படையப்பாவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்காக அல்ல. நாமே ஒருகாலத்தில் கைதட்டிய காட்சிகளை இன்று விமர்சிக்கும் அளவிற்கு சமூகமாக நாம் நகர்ந்திருக்கிறோம் என்பதற்கான சான்றுதான் அது. சினிமா சமூகத்தை வடிவமைக்கிறது; அதே நேரத்தில் சமூக மாற்றமும் சினிமாவை கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளது.
பெண்கள் அடக்கமாக இருந்தால்தான் நல்லவர்கள், அதிகாரம் கொண்டால் ஆபத்தானவர்கள் என்ற பிம்பத்தை உடைத்தே ஆக வேண்டிய கட்டத்தில் தமிழ் சினிமா நிற்கிறது. அந்த உடைப்பின் ஒரு பகுதியாகத்தான் படையப்பா மீண்டும் பார்க்கப்படுகிறது; அதனுடன் சேர்ந்து அதிலுள்ள வசனங்களும், பார்வைகளும் மறுபரிசீலனை செய்யப்படுகின்றன. இந்த விவாதமே ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளம்.


