கல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம்
இலங்கை
கல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பாறை இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவானது தற்போது அதன் அதிகபட்ச கொள்ளளவை அண்மித்து வருவதுடன், தற்போது சேனாநாயக்க சமுத்திரத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
இன்று (26) நண்பகல் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார, நேற்று (25) அதிகபட்ச மழைவீழ்ச்சியாக 225 மி.மீ. அம்பாறையில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலைமை காரணமாக விசேடமாக தமன, அம்பாறை, இறக்காமம், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தின் தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.























