• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒன்றை மறந்தால்‌, இன்னொன்று வரும்

சினிமா

புகைப் பிடிப்பதை நிறுத்துவதற்காக வெற்றிலைப்‌ போடப்போய்‌,
வெற்றிலைப்‌ போட்டுக்கொண்டே புகைப் பிடிக்கும்‌ இரட்டைப்‌ பழக்கம்‌
வருவதுபோல்‌,
மறக்க முயன்றவற்றை
மறக்கமுடியாமல்‌,
புதிய நினைவுகளும்‌
புகுந்துக்கொண்டு விடுகின்றன.
கள்ள நோட்டு அடித்ததற்காக ஒருவனைச்‌ சிறையில்‌ தள்ளினார்களாம்‌. அவன்‌
சிறையில்‌ இருந்துக்‌ கொண்டே கள்ள நோட்டைத்‌ தயாரித்தானாம்‌! இனி
அவனை எங்கே கொண்டு போய் தள்ளுவது?
மனத்துக்கு, மனைவியைவிட மற்றொருத்தியே அழகாகத்‌ தோன்றுகிறாள்‌.
கைக்குக்‌ கிடைத்துவிட்ட
மலரில்‌ வாசம்‌ தெரிவதில்லை.
கிடைக்காத மலர்கள்‌
கற்பனையில்‌ எழுந்து
மனத்தை இழுக்கின்றன.
நிறைவேறிவிட்ட ஆசைகளில்‌
மனது பெருமிதப்படுவதில்லை.
நிறைவேறாத ஆசைகளுக்காகவே
இது மரண பரியந்தம்‌ போராடுகிறது.
மகாலட்சுமியே மனைவியாகக் கிடைத்தாலும்‌ சினிமா நடிகைக்காக ஏங்கி நிற்கும்‌ ரசிகனைப்போல்‌, உள்ளவற்றைவிட இல்லாதன குறித்தே மனம்‌ ஏங்குகிறது.
பிறர்‌ புகழும்போது
நெக்குருகுகிறது.
இகழும்போது
கவலைப்படுகிறது.
ஓராயிரம்‌ பின்னல்கள்‌;
ஓராயிரம்‌ சிக்கல்கள்‌!
சிலந்தி எப்படி வலை கட்டிற்றென்று அதற்குத்தான்‌ தெரியும்‌.
இந்தச்‌ சிக்கல்கள்‌ எப்படி வருகின்றன என்று இறைவனுக்குத் தான்‌ தெரியும்‌.
கப்பலில்‌ பயணம்‌ செய்வது நம்‌ பொறுப்பு.
அதைக்‌ கரை சேர்க்க வேண்டியது இறைவன்‌ பொறுப்பு.
அலை இல்லா கடல்‌ ஒன்றை இறைவன்‌ உருவாக்கும்போது சலனமில்லாத
மனம்‌ ஒன்றும்‌ உருவாகி விடும்‌.
“மரம்‌ வைத்தவன்‌ தண்ணீர்‌ ஊற்றுவான்‌' என்பார்கள்‌.
“எப்போது ஊற்றுவான்‌?' என்று மனம்‌ ஏங்குகிறது.
சலனமும்‌, சபலமும்‌, கவலையும்‌ இல்லாதவர்கள்‌ யார்‌ இருக்கிறார்கள்‌?
செத்துப்போன தன்‌ குழநதையை உயிர்‌ மீட்டுத்‌ தரும்படி, புத்த தேவனிடம்‌
ஒரு தாய்‌ கெஞ்சினாளாம்‌.
“சாவே நிகழாத வீட்டில்‌ சாம்பல்‌ எடுத்துவா, மீட்டுத்‌ தருகிறேன்‌” என்று
புத்தர்‌ சொன்னாராம்‌.
தாய்‌, நாடெல்லாம்‌ அலைந்து, “சாவு நிகழாத வீடே இல்லையே! ”
என்றாளாம்‌.
“இந்தக்‌ கதையும்‌ அதில்‌ ஒன்றுதான்‌”. என்று கூறிப்‌ புத்தர்‌ அவளை
வழியனுப்பினாராம்‌.
கவலையே இல்லாத மனிதன்‌ என்று ஒருவனை நான்‌ பார்த்துவிட்டால்‌, நான்‌
கவலைப்படுவதில்‌ நியாயம்‌ உண்டு.
எனக்கு நூறு என்றால்‌ இன்னொருவனுக்கு இருநூறு.
அதுவரைக்கும்‌ நான்‌ பாக்கியசாலி.
அவனை விட குறைவாகத்தானே இருக்கிறேன்‌.

எல்லாம்‌ நிறைவேறி, நிம்மதியாக உயிர்‌ விடும்‌ வாய்ப்பு எவனுக்குமே
இல்லை.
ஒருவனுக்குத்‌ துயரம்‌ மனைவியால்‌ வருகிறது.
ஒருவனுக்கு மக்களால்‌ வருகிறது.
ஒருவனுக்கு நண்பனால்‌ வருகிறது.
ஒருவனுக்கு எதிரியால்‌ வருகிறது.
ஒருவனுக்கு சம்பந்தமே இல்லாத எவனாலோ வருகிறது.
கடலில்‌ பாய்மரக்‌ கப்பல்தான்‌
காற்றிலே தள்ளாடுகிறது.
எதிலும்‌ கெட்டிக்காரனாக இருப்பவனுக்குத்தான்‌
அடிக்கடி சஞ்சலம்‌
வருகிறது.
காகிதக்‌ கப்பலுக்கு
என்ன கவலை?
மனம்‌ காகிதம்போல
மென்மையாக இருக்கட்டும்‌.
சுக துக்கங்கள்‌, கோடை, பனி, மழை - அனைத்தையும்‌ தாங்கட்டும்‌.
மனதுக்கு வருகின்ற துயரங்களைப்‌ பரந்தாமனிடம்‌ ஓப்படைத்து விடு.

 

கவியரசர்
கண்ணதாசன்!
அர்த்தமுள்ள இந்துமதம்!

Leave a Reply