இரசாயனப் பொருளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில்
இலங்கை
தம்புள்ளை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆய்வகத்தில் காணப்பட்ட இரசாயனப் பொருளை தவறுதலாக உட்கொண்டதால் ஏழு பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஐந்து சிறுவர்களும் இரண்டு சிறுமிகளும் அடங்குவர்.
அவர்கள் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய பாடசாலை விடுமுறை நாட்களில் பாடசாலை ஆய்வகம் உடைக்கப்பட்டு, ஆய்வகத்திலிருந்து சில பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
இதையடுத்து, ஆய்வகத்தின் தரையில் சிதறிக்கிடந்த சிவப்பு நிறப் பொருளை மிளகாய்ப் பொடி என்று சிறுவர்கள் தவறாகக் கருதி அதை ருசித்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், முதற்கட்ட விசாரணையில், அந்த பொருள் இரும்பைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனம் என்பதும் தெரியவந்தது.
சிறுவர்கள் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.






















