சென்னையில் நடைபெற இருந்த காந்தாரா சாப்டர்1 பட புரமோஷன் நிகழ்ச்சி ரத்து
சினிமா
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' உருவாகி உள்ளது. நாளை மறுநாள் 2-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் சுமார் ரூ.33 கோடிக்கு படத்தின் விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற இருந்த 'காந்தாரா சாப்டர்1' பட புரமோஷன் நிகழ்ச்சியை படக்குழு ரத்து செய்தது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்த சம்பவத்தை அடுத்து 'காந்தாரா சாப்டர்1' பட புரமோஷன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக 'காந்தாரா சாப்டர்1' படக்குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளில் 'காந்தாரா சாப்டர் 1' வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.























