இலங்கையின் மூன்றாவது நனோ செயற்கைக்கோள் இன்று சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்
இலங்கை
இலங்கையின் மூன்றாவது நனோ செயற்கைக்கோள் இன்று சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நாட்டின் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியில் மற்றொரு மைல்கல்லைக் குறிப்பதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் செயற்படும் மொரட்டுவையில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் இன்ஸ்டிடியூட் ஃபார் மொடர்ன் டெக்னாலஜிஸின் (Arthur C. Clarke Institute for Modern Technologies) வழிகாட்டுதலின் கீழ் இலங்கை பொறியியலாளர்கள் குழுவால் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.
‘BIRDS-X DRAGONFLY’ என பெயரிடப்பட்ட இந்த நனோ செயற்கைக்கோள், ஆகஸ்ட் 24 ஆம் திகதியன்று நாசாவினால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்தநிலையில் இந்த செயற்கைக்கோள் இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2:15 மணிக்கு ISS இலிருந்து சுற்றுப்பாதையில் செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கை 2019 இல் அதன் முதல் நனோ செயற்கைக்கோளான ராவணா-1 யும் இரண்டாவது செயற்கைக்கோளான KITSUNE 2022 இலும் ஏவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.























