ஒரு தாயின் துணிவு பல போர்களை வெல்லும் - திரைப்படமாக உருவாகும் பிரதமர் மோடியின் வாழ்க்கை
சினிமா
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவரின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக உள்ளது. அதுகுறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது.
மோடியின் வாழ்க்கையை திரைப்படமாக சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு 'மா வந்தே' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நரேந்திர மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடிக்க உள்ளார்.
இந்த திரைப்படம், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற நரேந்திர மோடியின் அற்புதமான வாழ்க்கைப் பயணத்தைச் சித்தரிக்கிறது. சிறுவயது முதல் தேசத்தின் தலைவராக உயர்ந்த வரலாற்றையும் உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டும் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக, அவருக்கு எப்போதும் ஆதரவாக இருந்த தாயார் ஸ்ரீமதி ஹீராபென் மோடி அவர்களுடனான ஆழமான பந்தத்தை இத்திரைப்படம் வெளிப்படுத்துகிறது.
சர்வதேச தரத்திலும், அற்புதமான VFX தொழில்நுட்பங்களுடனும், இந்தியாவின் முன்னணி நுட்ப நிபுணர்களின் பங்களிப்புடனும் இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. பான்-இந்தியா அளவில் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியீடு செய்யப்படுவதோடு, ஆங்கிலத்திலும் தயாரிக்கப்படுகிறது.
ஊக்கமூட்டும் இந்த வாழ்க்கை வரலாறு, மறக்கமுடியாத திரை அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் உருவாகிறது.
இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். கிராந்தி குமாரின் எழுத்து மற்றும் இயக்கத்தில், கே. கே. செந்தில் குமார் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணி மேற்கொள்ள உள்ளார்.





















