பாடசாலை நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைக்கு தடை
இலங்கை
பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரையிலும், முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டும் என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
அண்மையில் மணல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் வேனுடன் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாடசாலை நாட்களில் குறித்த காலப்பகுதியில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்கள் வீதியோரத்தில் முறையாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் இது தொடர்பான விழிப்புணர்வு நாட்டில் உள்ள சகல பிரதேச செயலகங்களின் ஊடாக கடந்த 4 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






















