ரமோன் மக்சேசே விருது - முதல் முறையாக இந்திய தன்னார்வ அமைப்புக்கு அறிவிப்பு
இந்தியாவின் முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமான 'எஜுகேட் கேர்ள்ஸ்' 2025 ஆம் ஆண்டுக்கான ரமோன் மாக்சேசே விருதை வென்றுள்ளது.
ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் இந்த விருது, சமூக சேவையில் அசாதாரண தைரியத்தையும் தன்னலமற்ற சேவையையும் வெளிப்படுத்திய தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 'எஜுகேட் கேர்ள்ஸ்' இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற முதல் இந்திய அமைப்பாக வரலாறு படைத்துள்ளது.
ராஜஸ்தானில் 2007 ஆம் ஆண்டு சஃபினா ஹுசைன் என்பவரால் தொடங்கப்பட்ட எஜுகேட் கேர்ள்ஸ், கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் பள்ளி செல்லாத பெண்களுக்கு கல்வி கற்பிக்க செயல்படுகிறது.
ரமோன் மகசேசே விருது அறக்கட்டளை (RMAF) இன் கூற்றுப்படி, எஜுகேட் கேர்ள்ஸ் 2 மில்லியனுக்கும் அதிகமான பெண்களைப் பள்ளியில் சேர்ப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
RMAF மூலம் 2025 வெற்றியாளர்களுக்கு நவம்பர் 7 ஆம் தேதி பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெறும் 67வது விருது வழங்கும் விழாவில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.























