TamilsGuide

சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு அபராதம்

சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக  இலங்கை அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபையினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் போட்டிக் கட்டணத்தில் 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பந்து வீசிய காலம் பரிசீலிக்கப்பட்ட பின்னர், இலங்கை அணி இலக்கை விட ஒரு ஓவர் குறைவாக வீசியதாக நடுவர்களால் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் முன்மொழியப்பட்ட தண்டனையையும் ஏற்றுக்கொண்டமையினால் மேலதிக விசாரணை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட்  சபை அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இடம்பெற்று வருகின்றது. ஹராரேயில் நேற்று முன்தினம் (29) இடம்பெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. அதன்படி, இந்த ஒருநாள் தொடரில் தற்போது இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment