ரணிலை சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறியவர்களே தற்போது அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்புகின்றனர்
இலங்கை
”முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒன்றிணைந்த எதிர்த்தரப்பினர் கூட்டணி அமைத்துள்ளமையானது, அரசாங்கத்திற்கு ஒருபோதும் சவாலாக அமையாது” என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ”கடந்த காலத்தில் ரணிலை சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறியவர்களே தற்போது அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்புகின்றனர் எனவும் ” டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ” ரணில்விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பாக எவரும் குழப்பமடைய தேவையில்லை. எவரேனும் தவறு செய்திருப்பார்களாயின் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள். சட்டம் அனைவருக்கும் சமம்.
தற்போது ரணில்விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத்தொடர்ந்து ஒரு சிலர் குழுக்களாக இணைந்துள்ளனர். இவ்வாறு இன்று குழுக்களில் இணைந்துள்ள பலர் ரணில்விக்ரமசிங்கவை சிறையில் அடைக்க வேண்டும் என கடந்த காலங்களில் கூறியவர்களாவர்.
எதிர்த்தரப்பினர் இன்று ஒன்றிணைந்திருப்பதனால் எமக்கு எந்தவித சவாலும் அல்ல. தற்போது ஒன்றிணைந்த எதிர்த்தரப்பினராக ஊடக சந்திப்பில் பங்கேற்ற 90 வீதமானவர்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளன.தவறு இழைத்தவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிப்பதற்காக ஒன்றிணைந்துள்ளனர் ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.























