உக்ரைன் தாக்குதல் - 3 நாட்களாக தீப்பிடித்து எரியும் ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
ரஷியாவின் ரோஸ்டோவ் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 3 நாட்களாக தீப்பிடித்து எரிந்து வருகிறது.
நோவோஷாக்தின்ஸ்க் நகரில் அமைந்துள்ள இந்த சுத்திகரிப்பு நிலையம் உக்ரைனால் டிரோன் மூலம் தாக்கப்பட்டது. இது தெற்கு ரஷியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும். தீ விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
ரோஸ்டோவ் மாகாணத்தின் பொறுப்பு ஆளுநர் யூரி ஸ்லியுசர், சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார். தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
இந்த சுத்திகரிப்பு நிலையம் முக்கியமாக எண்ணெய் ஏற்றுமதிக்காகவே செயல்படுகிறது.
ரஷியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை உக்ரைன் தீவிரப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து நோவோகுய்பிஷெவ்ஸ்க், சிஸ்ரான், ரியாசான் மற்றும் வோல்கோகிராட் உள்ளிட்ட பல ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.






















