துணை வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்தம்
இலங்கை
மேல் மாகாண சபையின் கீழ் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள துணை வைத்திய நிபுணர்கள் இன்று (21) முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்த தீர்மானத்தை இவர்கள் எடுத்துள்ளனர்.
அதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பு தொடங்கும் என்று துணை வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் துணை வைத்திய சேவை வல்லுநர்கள் நேற்று (20) அடையாள வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.
இந்த நிலையில், மேல் மாகாண சபைக்கு சொந்தமான 31 வைத்தியசாலைகளில் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
அதிகாரிகளிடமிருந்து அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் கிடைக்காததால் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, தபால் தொழிற்சங்கங்கள் தொடங்கிய தொடர் வேலைநிறுத்தம் இன்று நான்காவது நாளாக தொடர்கிறது.
19 கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு முதல், நாட்டின் அனைத்து தபால் நிலையங்களிலும் தபால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கின.
வேலைநிறுத்தம் காரணமாக, தபால் அலுவலகம் மூலம் சேவைகளைப் பெற வந்த மக்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.






















