• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்காவில் தனது ஜெட் விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப ரூ.2.2 கோடியை ரொக்கமாக கொடுத்த புதின்

ஆகஸ்ட் 15 அன்று அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் ரஷிய அதிபர் புதின் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்திருந்தார். இந்தச் சந்திப்பு உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் இல்லாமல் முடிந்தது.

இந்நிலையில் புதின், தனது மூன்று ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப சுமார் 2.2 கோடி ரூபாயை ரொக்கமாக செலுத்த வேண்டியிருந்தது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

பேட்டி ஒன்றில் பேசிய அவர், ரஷியா மீது அமலில் இருக்கும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக அமெரிக்க வங்கிகளைப் பயன்படுத்த முடியாத காரணத்தினால், எரிபொருள் நிரப்புவதற்காக ரொக்கமாகப் பணம் செலுத்த வேண்டியிருந்தது என தெரிவித்தார்.

மேலும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்காதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த ரூபியோ, ரஷியா ஏற்கனவே கடுமையான தடைகளின் கீழ் உள்ளது என்றும், புதிய தடைகள் உடனடியாகப் பலன் தராது என்றும் கூறினார்.

இதற்கிடையே, அதிபர் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் அதன் நிலப்பகுதியை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு திட்டத்தையும் ஜெலென்ஸ்கி உறுதியாக நிராகரித்துள்ளார்.

3 ஆண்டுகளை கடந்து நடந்து வரும் உக்ரைன் போரினால் ரஷியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply