ஓமந்தை விபத்தில் இருவர் உயிரிழப்பு - பலர் காயம்
இலங்கை
வவுனியா ஓமந்தை எ9 வீதியில் நேற்றிரவு (17) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் முல்லைத்தீவு விசுவமடு பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் மற்றும் 30 வயதுடைய ஆண் என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த கெப் வாகனம் ஏ9 வீதியின் ஓமந்தை மாணிக்கர் வளவுப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது குறித்த வாகனத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 15 இற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.
விபத்தினால் வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கிவீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் இருவர் உயிரிழந்ததுடன், ஏனையோர் படுகாயமடைந்தனர்.
அவர்களில் 9 பேர் பெண்கள் ஆறு பேர் சிறுவர்கள் ஆவார்.
அவர்கள் கண்டியில் இடம்பெற்ற மரணவீடு ஒன்றிற்கு சென்றுவிட்டு மீண்டும் விசுவமடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.























