கண்டி நகரை இரவிலும் செயற்படும் நகரமாக மாற்றும் முயற்சி
இலங்கை
கண்டி நகரத்தை 24 மணி நேரமும் செயற்படும், சுற்றுலா நகரமாக மாற்றும் நோக்கில், இம் மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் சிறப்புத் திட்டம் ஒன்று நடை பெறவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், கண்டி நகரின் முக்கிய ஹோட்டல்கள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றம் கலாசார மையங்களில் இசை நிகழ்ச்சிகள், கலைக் கண்காட்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
முக்கியமாக, இரவு நேரத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய வகையில் இரவுச் சந்தைகள், தெரு உணவு விழாக்கள் (Street Food Festival), பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கண்டி நகரின் பண்பாடு மற்றும் வரலாற்று சிறப்புகளை அனுபவிக்க வாய்ப்பளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி, கண்டியின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதோடு, உள்ளூர் வணிக மற்றும் வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.























