நுவரெலியாவில் அரச வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்
இலங்கை
நுவரெலியாவில் இயங்கும் அரச வங்கி ஊழியர்கள் இணைந்து, நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் (12) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் முதன்மை கோரிக்கையாக, அரச வங்கிகளில் 1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இணைத்துக் கொள்ளப்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குமாறு கோரியும், ஏனைய அரச ஊழியர்கள் போன்று தமக்கும் அனைத்துச் சலுகைகளும் பெற்று தரக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டமானது பி.ப 12.30 மணிமுதல் 1.30 வரை நடத்தப்பட்டது. இதன் போது, அரச வங்கி எதிர் நோக்கும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் கோரிக்கைகள் எதிர்வரும் நாட்களில் முறையாகத் தீர்க்கப்படாவிட்டால், அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.























