யாழ்.ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்
இலங்கை
யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாள்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று காலை(12) 08 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் எழுதுமட்டுவாள் பகுதியில் உள் வீதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் எழுதுமட்டுவாள் தெற்கு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய செல்வகுணசிங்கம் பேரின்பநாயகி என்ற பெண் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






















