சோமரத்னவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால், அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு
இலங்கை
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால், அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ”தமிழ் மக்களின் மனங்களில் அழியா இடம் பிடித்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் ஏற்கனவே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
செம்மணி பகுதியில் சுமார் அறுநூறு உடல்கள் வரை புதைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே அவரால் வழங்கப்பட்ட வாக்குமூலம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவரின் மனைவியால் ஜனாதிபதிக்கு எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதம் தற்போது மற்றுமொரு திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.
செம்ணியில் சுமார் 300 பேர் வரையில் புதைக்கப்பட்டதாகவும், சிறையில் உள்ள தனது கணவருக்கு அதற்கான உத்தரவுகளை பிறப்பித்த நபர்கள் தொடர்பில் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது.
இந்த நிலையில், சோமரத்ன ராஜபக்ஷ ஒரு குற்றவாளியாக காணப்பட்டாலும், அவர் சில விடயங்களை கூறப்போவதாக, அவரின் மனைவி கூறுவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆகவே, சோமரத்ன ராஜபக்ஷ என்ன கூற போகிறார் என்பதை அறிய வேண்டும் எனவும், சிறையில் உள்ள நிலையில் அவருக்கு ஏதாவது உயிர் ஆபத்துக்கள் ஏற்படுமானால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






















