நில அளவை வரைபடங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை
இலங்கை
இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் 225ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் இணைவழியில் பணம் செலுத்தி நில அளவை வரைபடங்களை உங்கள் வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும் என்று அளவையாளர் நாயகம் வை.ஜீ.ஞானதிலக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” இதுவரை, நாங்கள் அலுவலகம் மூலம் பொதுமக்களுக்கு நில அளவை வரைபடங்களை வழங்கி வந்தோம். ஆனால் இப்போது பொதுமக்களுக்கு நில அளவை வரைபடங்களை இணையவழியில் (Online) பெறுவதற்கான வாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி, அவர்கள் இணையவழி ஊடாக பணம் செலுத்தி, தங்களுக்குத் தேவையான நிள அளவை வரைபடங்களை தங்கள் வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் , பொதுமக்களுக்கு நிலம் சார்ந்த தகவல்களை இணையவழியில் வழங்குவதற்கான நடவடிக்கைளில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் அளவையாளர் நாயகம் வை.ஜீ.ஞானதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.






















