தலவாக்கலையில் திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்
இலங்கை
தலவாக்கலை பகுதியிலுள்ள அமைந்துள்ள தமிழ்ப் பாடசாலையொன்றில் இன்று (16) தரம் 6 இல் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள் திடீர் சுகவீனம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
நச்சுத்தன்மை வாய்ந்த – உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய இரசாயனங்களைக் கொண்ட வாசனை திரவியங்களை முகர்ந்ததால் இந்த நிலையினை அவர்கள் எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.
நச்சுத்தன்மை வாய்ந்த வாசனை திரவியங்களை முகர்ந்தததால் குறித்த மாணவர்களுக்கு தலைசுற்றல், தலைவலி, குமட்டல் , வாந்திபேதி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து மாணவர்கள் சிகிச்சைக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், அவர்களது உடல் நிலை மோசமானதாக இல்லை என்று லிந்துலை பிரதேச பிராந்திய வைத்திசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி அசேல மல்லவராச்சி குறிப்பிட்டார்.
குறித்த பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்கும் ஒரு மாணவர் பாடசாலைக்கு கொண்டு வந்து நறுமண போத்தலை ஏனைய மாணவர்களுக்கும் பூசியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.























