வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் யாழ்.பொதுநூலக முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்
இலங்கை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.
திட்டமுன்னேற்ற மீளாய்வை இரு வாரங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளுமாறும், இவற்றுக்குப் பொறுப்பாக பதவிநிலை அலுவலர் ஒருவரை நியமிக்குமாறும் யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு, ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலர் ஆர்.குருபரன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணி மற்றும் பயிற்சி செ.பிரணவநாதன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் ஆகியோருடன் யாழ். பொதுநூலகத்தின் பிரதான நூலகர், மத்திய கட்டடங்கள் திணைக்களப் பொறியியலாளர், மாநகர சபையின் பொறியியலாளர், நூலகம் நிறுவனத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.























