போதைப்பொருள் வழக்கு- ஜாமினில் வெளியே வந்த நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா
சினிமா
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த மாதம் 23-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்தும், 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள் மீதான விசாரணையின்போது இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
இதை தொடர்ந்து, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து மனு மீதான விசாரணை நடைபெற்றது.
விசாரணை நிறைவு பெற்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் ஜாமினில் வெளியே வந்தனர்.























