அருப்புக்கோட்டை செல்வ விநாயகர் கோவிலுக்கு திரிஷா தந்த அன்பளிப்பு...
சினிமா
விலங்குகள் மீது நடிகை திரிஷா பிரியம் கொண்டவர். இந்நிலையில் அவர், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கோவிலுக்கு எந்திர யானை வழங்கி உள்ளார். அந்த யானையின் அறிமுக நிகழ்ச்சியில் ஊர்மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் செல்வ விநாயகர் கோவில் மற்றும் வராகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரபல நடிகை திரிஷா மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து ரூ.6 லட்சத்தில் எந்திர யானையை வழங்கி இருக்கிறார்கள்.
3 மீட்டர் உயரமும், 800 கிலோ எடையிலும் நிஜயானை போன்று பிரமாண்டமாக இந்த எந்திர யானை உள்ளது. அதற்கு கஜா என பெயரிட்டு இருக்கிறார்கள்.
கேரளாவில் உருவாக்கப்பட்ட இந்த எந்திர யானைக்கு தந்தங்கள், கண்கள், காதுகள் அனைத்தும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. சக்கரங்கள் மூலம் வீதி உலா அழைத்துச்செல்ல முடியும். சுவாமி ஊர்வலத்துக்கும் பயன்படுத்த முடியும். காதுகள், தும்பிக்கையும், தலையையும் அசைக்கின்றது. பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் செய்கிறது. பக்தர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கவும் செய்யுமாம்.
இந்த எந்திர யானையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி மேளதாளங்கள் முழங்க கோவிலில் நடைபெற்றது. உதவி போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு எந்திர யானையை அறிமுகம் செய்து வைத்தனர். அந்த யானை நகர வீதிகளில் அழைத்துச்செல்லப்பட்டபோது, மக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக எந்திர யானை, கோவிலுக்கு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தகர செட் அமைத்து நிஜயானை போன்று வைத்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதி பக்தர்கள் கூறும்போது, "வனவிலங்குகளை பாதுகாக்கும் விதமாகவும், யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் வகையிலும் நடிகை திரிஷா இந்த எந்திர யானையை வழங்கி இருக்கிறார்" என்றனர்.






















