• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடக்கை முடக்கி போராட்டத்தில் குதிக்கும் தனியார் பேருத்துகள்

இலங்கை

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறல் செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் முதலாம் திகதி வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை(27) நடைபெற்ற கால அட்டவணைக்கு முரணான சேவை ஒன்றால் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை தரப்பினரிடையே குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது.

இதையடுத்து சில நிமிடங்கள் வாகன நெரிசல் ஏற்பட்டதை அடுத்து பொலிசார் வரவழைக்கப்பட்டு நிலைமை சுமூகமாக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்க தலைவர்,
கருத்து தெரிவித்தார்.

இன்று காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்று குறித்த சாலை முகாமையாளரின் உத்தரவுக்கமைய சட்டவிரோத சேவையை வவுனியா நோக்கி முன்னெடுக்க முயன்றது.

இதை அவதானித்த நாம் குறித்த சட்டவிரோத செயற்பாட்டை கண்டித்து அதை நிறுத்துமாறு வலியுறுத்தினோம். ஆனால் இலங்கை போக்குவரத்து சபை அதனை மீறி சேவையை முன்னெடுக்க முயன்றது.

ஏற்கனவே இச்சட்டவிரோதம் குறித்து துறைசார் தரப்பினருக்கும் , போக்குவரத்து அதிகார சபைக்கும், துறைசார் அமைச்சு, வடக்கின் ஆளுநர் ஆகியோரிடமும் முறையிட்டிருந்ததுடன், பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம்.

ஆனாலும் இதுவரை எந்தவொரு தீர்வும் கிடைக்காத நிலையே காணப்படுகின்றது.

அத்துடன் இலங்கை போக்குவரத்து சபை சட்டத்துக்கு முரணாக செயற்படுவதுடன் தனியார் போக்குவரத்து சேவையை முடக்கவும் முயன்று விபத்துக்கள் ஏற்படுவதற்கும், முரண்பாடுகளை உருவாக்குவதற்கும் வலிந்து இழுக்கின்றனர்.

எனவே இவ்வாறான இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்தும், அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி தனியார் பேருந்துகளின் பாதுகாப்பான சேவையை உறுதி செய்வதற்காகவும் எதிர்வரும் செவ்வாயன்று (01) வடக்கு மகாணம் தழுவிய ரீதியில் முழுமையான சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
 

Leave a Reply