உறுப்பினரிடையே ஒருமித்த கருத்தின்மை – யாழ் மாநகர சபையின் விசேட அமர்வில் குழப்பம்
இலங்கை
யாழ்.மாநகரின் நியதிக் குழுக்களை நியமிப்பதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தின்மையால் யாழ் மாநகர சபையின் விசேட அமர்வின் போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையின் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது அமர்வின் தொடர்ச்சியாக, விசேட அமர்வுக்காக இன்றையதினம் (27) திகதியிடப்பட்டிருந்தது.
இதனடிடையில் இன்று காலை(27) முதல்வர் மதிவதனி தலைமையில் சபையின் விசேட அமர்வு ஆரம்பமானது.
கூட்டம் ஆரம்பமான நிலையில் கடந்த வாரம் ஏற்பட குழப்பத்தால் ஒத்திவைக்கபட்ட சுகாதாரக் குழுவுக்கான உறுபினர்கள் தெரிவு இன்று நடைபெற்றது.
அதன் பின்னர் மேலும் சில குழுக்களுக்கான உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.
குழுக்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு முடிவடைந்த பின் கூட்டத்தை முடித்துக்கொள்வதாக முதல்வர் அறிவித்து சபையிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் முன்னதாக சபையின் உறுப்பினர் தர்சானந்த், கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் சுகாதார குழுவில் உள்வாங்கப்பட உறுப்பினர்கள் குறித்து ஏற்பட்ட இணக்கமின்மையால் கூட்டம் நிறுத்தப்பட்டு இன்று(27) அதன் தொடர்ச்சி நடைபெற்றது.
ஆனால் அன்று குழப்பத்தை ஏற்படுத்திய அதே தெரிவுகள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது எவ்விதத்தில் நியாயமானது. தமக்கு தமது கருத்துக்களை கூற சபையில் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். கூட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டாம் என சபையின் உறுப்பினர் தர்சானந்த் கோரிக்கை விடுத்து சபையின் குறுக்கே சென்று முதல்வர் வெளியேறுவதை தடுத்ததால் அங்கு குழப்பம் ஏற்பட்டது.
ஆனாலும் முதல்வர் வெளியேறியதால் தமக்கு தமது எதிர்ப்பை காண்பிக்க நியாயம் கிடைக்கவில்லை என கூறியதுடன் சபையில் வெளி நபரது ஆதிக்கம் வலுவாக இருப்பதாகவும் இது சபையின் நன்மைக்கு ஏற்றதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.























