• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மோசமான வானிலை.. ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் ஒத்திவைப்பு

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து திட்டமிடப்பட்டிருந்த ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஆக்சியம்-4 மனித விண்வெளிப் பயணம், மோசமான வானிலை காரணமாக நாளை (ஜூன் 11 ஆம் தேதிக்கு) ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த நான்காவது தனியார் மனித விண்வெளிப் பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி என மொத்தம் நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தனர்.

கடந்த 1984 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் விண்வெளிப் பயணத்தில் இணைந்த ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு, 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுபான்ஷூ சுக்லா பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாசா மற்றும் இஸ்ரோவின் கூட்டு முயற்சியான இந்த ஆக்சியம்-4 திட்டம், விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply