HKU5- அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராகுங்கள்.. பீதியை கிளப்பும் வௌவால் வைரஸ் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு ஆபத்தான வைரஸ், மனித குலத்தை நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வௌவால்களில் காணப்படும் 'HKU5' என்ற துணை வகை வைரஸ், ஒரு சிறிய மரபணு மாற்றத்துடன் மனித செல்களுக்குள் நுழைந்து, அடுத்த உலகளாவிய தொற்றுநோயை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வட கரோலினா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகம் (WSU) தலைமையிலான இந்த ஆய்வின் விவரங்கள், முன்னணி அறிவியல் இதழான 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' இல் வெளியிடப்பட்டன
வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகம் (WSU) தலைமையிலான ஆய்வின்படி, HKU5 வைரஸ்கள் மனித செல்களில் உள்ள ACE2 ஏற்பியைப் பயன்படுத்த முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸும் அதே ACE2 ஏற்பியைப் பயன்படுத்துகிறது.
இந்த HKU5 வைரஸ், மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் (MERS-CoV) உடன் நெருங்கிய தொடர்புடையது. MERS நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் சுமார் 34% என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வைரஸ்கள் ஜப்பானிய வீட்டு வௌவால்களில் கண்டுபிடிக்கப்பட்டாலும், சமீபத்திய ஆய்வுகள் இவை மின்க்ஸ் போன்ற இடைநிலை விலங்குகளுக்கு பரவி வருவதாகக் கூறுகின்றன. இது மனிதர்களுக்கு பரவுவதற்கான முதல் படியாக அமையலாம் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
WSU வைராலஜிஸ்ட் மைக்கேல் லெட்கோ, "இந்த வைரஸ்கள் மனிதர்களுக்குள் நுழைந்ததற்கான ஆதாரம் இல்லாவிட்டாலும், அதற்கான திறன் உள்ளது. எனவே அவற்றைக் கண்காணிப்பது முக்கியம்" என்று எச்சரித்துள்ளார்.
ஆல்பாஃபோல்ட் 3 போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள், வைரஸ் எவ்வாறு செல்களுடன் தொடர்பு கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில் முக்கியப் பங்காற்றி, ஆராய்ச்சி வேகத்தை விரைவுபடுத்தியுள்ளன.
இந்த ஆய்வு, எதிர்கால தொற்றுநோய்களை எதிர்கொள்ளும் உத்திகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.























