இலங்கை வந்தடைந்தார் நியூசிலாந்து துணை பிரதமர்
இலங்கை
நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
நேற்று (24) இரவு நாட்டுக்கு வந்திறங்கிய அவரை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றுள்ளார்.
இதேவேளை, 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
குறித்த விஜயத்தின் போது, நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நியூசிலாந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இந்த விஜயத்தின் போது எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளார்.
இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை தொடர்ந்து, இந்தியா மற்றும் நேபாளத்திற்கும் அவர் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





















