வலிகாமம் வடக்கில் இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்கக்கோரி பொதுமக்களால் வடக்கு ஆளுநரிடம் மகஜர் ஒன்று இன்று(17) கையளிக்கப்பட்டது.
வலிகாமம் வடக்கு வள நிலையம் எனும் பொது அமைப்பினூடாக வலிகாமம் வடக்கின் மயிலிட்டி, பலாலி, தையிட்டி உள்ளடங்கலாக காணப்படும் விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்குமாறு கோரி பிரதேச மக்களால் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டது.
நீண்ட காலமாக கடற்றொழில் மற்றும் விவசாயம் செய்வதற்கும் தமது இருப்பிற்குமான சொந்த நிலங்கள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை எனவும் படிப்படியாக விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் முழுமையாக இன்னமும் விடுவிக்கப்படாமையை ஆளுநரிடம் எடுத்துக்கூறியும் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கு பதில் வழங்கிய வடக்கு மாகாண ஆளுநர் தற்போதுள்ள ஜனாதிபதியின் காலத்தில் காணிகள் அனைத்தும் படிப்படியாக விடுவிக்கப்படும் என குறிப்பிட்டதாக காணி உரிமையாளர்கள் குறிப்பிட்டனர்.