மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் நேற்று (11) இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 87 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
தேடுதல் நடவடிக்கையின் போது 218 கிலோ, 800 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் ஆளில்லாத நிலையில் கண்ணாடி இழை படகு ஒன்று கடற் படையினரால் கைப்பற்றப்பட்டது.
அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின், இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவனத்தினால் பேசாலை கடற்கரை பிரதேசத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று அவதானித்து சோதனை செய்யப்பட்டது.
அங்கு, படகில், எட்டு பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த 218 கிலோ 800 கிராம் கேரள கஞ்சாவுடன் படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
கடற்படையின் நடவடிக்கைகளால் படகை கரைக்கு கொண்டு வர முடியாததால், கடத்தல் காரர்கள் பேசாலை கடற்கரையில் படகுடன் கேரள கஞ்சாவினை கை விட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.