TamilsGuide

இந்தியா நம்மை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறது - அதிபர் டிரம்ப்

இந்தியாவில் வாக்குப்பதிவை அதிகரிக்க வழங்கப்படும் 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது. இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது. நாம் ஏன் நிதி தர வேண்டும் என டிரம்ப் தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் தேர்தல் முடிவை மாற்ற முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் இந்த நிதியை அறிவித்து இருந்ததாக டிரம்ப் தெரிவித்தார். தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த முயற்சி நடந்ததாக தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு நிதி அளிக்கபட்டது தொடர்பாக டிரம்ப் தொடர்ந்து 4-வது நாளாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அதிபர் டிரம்ப், "இந்திய தேர்தல்களில் உதவுவதற்காக 18 மில்லியன் அமெரிக்க டாலர்களை நாம் ஏன் வழங்க வேண்டும்? அதற்கு பதிலாக நாம் ஏன் பழைய காகித வாக்குச் சீட்டுகளுக்கு மாறி, அவர்களின் தேர்தல்களில் உதவக்கூடாது?"

"நாம் இந்திய தேர்தல்களுக்கு பணம் கொடுக்கிறோம். ஆனால் அவர்களுக்கு பணம் தேவையில்லை. உலகின் மிக அதிக வரி விதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாம் அங்கு எதையாவது விற்க முயற்சிக்கும் போது 200 சதவீத வரி விதிக்கிறார்கள். அதன்பின் நாம் அவர்களின் தேர்தலுக்கு உதவ நாம் அவர்களுக்கு நிறைய பணம் கொடுக்கிறோம். அவர்கள் நம்மை நன்றாக பயன் படுத்திக்கொள்கிறார்கள்," என்று கூறினார்.
 

Leave a comment

Comment