TamilsGuide

இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது -திலித் ஜயவீர

”நாட்டு மக்கள் விரும்புகின்ற மாற்றத்தை ஏற்படுத்த இந்த சந்தர்ப்பத்தைப்  பயன்படுத்திக் கொள்ளுமாறு” சர்வஜன சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

யட்டியாந்தோட்டையில்  இன்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து  திலித் ஜயவீர  மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த நாட்டிலுள்ள ஊழல் அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். இந்த நாட்டிலுள்ள அப்பாவி மக்கள் இனியும் பாதிப்படையக் கூடாது அதற்கு நீங்கள் பாரிய மாற்றம் ஒன்றை கேட்டீர்கள். அதனால்தான் நாடாளுமன்றத்திலுள்ள 225 பேரையும் வேண்டாம் எனக்  கூறினீர்கள்.

என்றாவது ஒரு நாள் இந்த நாட்டை சரி செய்வார்கள் என நாம் அரசியல்வாதிகளை தொடந்து நம்பியிருந்தோம்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து எங்களுக்கு துரோகமே செய்துள்ளனர். நான் எனது சொத்து அறிவிப்போடு அரசியலுக்கு வந்தேன். மற்ற வேட்பாளர்கள் தங்கள் சொத்துக்களை அறிவித்துள்ளனர். முதல் மூவரின் வருமானம் 2 இலட்சம் ரூபாவுக்கு குறைவாக உள்ளது.

நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொறுப்பேற்று இந்த புதிய அரசியலை செய்கிறோம். நீங்கள் விரும்பிய இலங்கையை எவ்வாறு உருவாக்குவது என்பது எமது மூலோபாய திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று அதை எதிர்த்து ஒரு வார்த்தைக் கூட யாராலும் சொல்ல முடியாது.

எனவே இந்த நாட்டை நேசிக்கும் இலங்கையர்களை ஒன்று திரட்டி பயணத்தை ஆரம்பித்தோம்.
இந்த நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது. அனைத்து வேட்பாளர்கனையும் அழைத்தபோது எவரும் பொது மேடைக்கு வரவில்லை.

நான் எனது கூட்டங்களை ரத்து செய்துவிட்டு சரியாக 3 மணிக்கு அமர்ந்தேன். சஜித் வரவில்லை. அனுர வரவில்லை. நாமல் வரவில்லை. பின்னர் அவர்கள் மூவரும் ஒரு கடையில் தேநீர் குடித்துக்கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன்.
அவர் வந்தால்தான் நான் வருவேன், இவர் வந்தால்தான் அவர் வருவார் என ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளை மக்கள் நம்பக்கூடாது.

இந்த நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது” இவ்வாறு திலித் ஜயவீர தெரிவித்தார்.
 

Leave a comment

Comment