TamilsGuide

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது

”நாடு முழுவதும் சஜித்தின் அலை, அவரது வெற்றியைத் தடுக்கவே முடியாது” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவை ஆதரித்து, மானிப்பாயில் நேற்று இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” சஜித் பிரேமதாசவின் வெற்றியே நாடு முழுவதும் தென்படுகின்றது. பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதால் கிடைத்துள்ள அனுபவத்தின் அடிப்படையிலேயே இதனைத் தெரிவிக்கின்றேன்.

‘ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளவர்கள் நாட்டைச் சூறையாடியவர்கள். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சேர்ந்து, இவர்கள்தான் நாட்டின் வளங்களைச் சூறையாடினர். இனவாதத்தைக் கட்டவிழ்த்து சமூகங்களை ஒடுக்கினர். மதவாதிகளுக்கு முதலிடமளித்து எமது மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தினர்.

வரலாற்றில் இடம்பெறாத மிகப் பெரிய ஊழல்கள் ரணிலின் அமைச்சரவையில் இடம்பெற்றன. கோட்டாபய ராஜபக்ஷவின் எஞ்சிய காலத்தை ஆள வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஊழல்வாதிகளையே பாதுகாக்கிறார்.

இதனால், சிங்கள மக்கள் ரணில் விக்ரமசிங்கவையும் எதிர்க்கின்றனர். மூன்றாவது இடத்திலேயே ரணில் உள்ளார். முதலாம் இடத்திலுள்ள சஜித் பிரேமதாசவின் வெற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டது.

மாற்றம் வேண்டிப் போட்டியிடும் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுபவம் போதாது. எனவே இவர் ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதங்களில் வரிசை யுகம் வந்துவிடும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சஜித்தின் ஆதரவு உச்சத்தை தொட்டுவிட்டது.

எனவே உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக, டெலிபோன் சின்னத்துக்கு வாக்களித்து வெற்றியின் பங்காளராகுங்கள்’ இவ்வாறு ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment