TamilsGuide

வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கியது இலங்கை - அடுத்த மாதம் அமல்

பொருளாதார நெருக்கடியின்போது இலங்கை அரசு அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்க இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. கொரோனா தொற்று தொடங்கியது முதல் 4 ஆண்டாக இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்து வந்தன. தற்போது பொருளாதாரம் சற்று மீண்டு வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை தெரிவித்தது.

இந்நிலையில், பொருளாதாரத்தில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அனைத்து வாகனங்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க உள்ளோம் என இலங்கை அரசு தெரிவித்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டப்படி அக்டோபர் 1 முதல் 3 கட்டமாக தடை நீக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

முதல்கட்டமாக வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பொது போக்குவரத்து வாகனங்கள், 2ம் கட்டமாக டிசம்பர் 1 முதல் வணிக வாகனங்கள், 3ம் கட்டமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் தனியார் பயன்பாட்டு கார்களை இறக்குமதி செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், பொருளாதார செயல்பாடுகள் மேலும் அதிகரிக்கும். அதன் மூலம் அரசின் வரி வருவாய் அதிகரிக்கும் என அரசு கணக்கிட்டுள்ளது.
 

Leave a comment

Comment