TamilsGuide

சஜித்தும் அநுரவும் மக்களின் ஆணையைக் கோருவதற்கு தகுதி அற்றவர்கள்

“பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காது தப்பியோடிய சஜித்தும் அநுரவும் இன்று மக்களின் ஆணையை கோருவதற்கு தகுதி அற்றவர்கள்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ருவன்வெலயில் நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா என்ற வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத்  தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கடந்த காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களை வேடிக்கைப் பார்க்க முடியாது என்பதாலேயே நாட்டை நான் பொறுப்பேற்றுக் கொண்டேன்.

இன்று எல்லாப் பொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. மக்களின் கஷ்டங்களை தீர்ப்பதற்காக ஒன்றுபடுமாறு அனுரவிற்கும் சஜித்துக்கும் அன்று அழைப்பு விடுத்தேன்.
ஆனால் அவர்கள் முன்வரவில்லை மக்களின் கஸ்டங்களை புரியாத இந்த இருவரும் இன்று
மக்களின் ஆணையை கோர என்ன உரிமை இருக்கிறது என்று நான் கேள்வி எழுப்புகிறேன்.

நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதே எனது இலக்கு. அதற்கு இடமளியுங்கள்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தையும் பாதுகாப்போம். இந்த பொருளாதாரத்தைப் பலப்படுத்தி நாட்டு மக்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கவே நான் மக்கள் ஆணையை கேட்கிறேன்.

சஜித் எல்லாவற்றையும் இலவசமாக தருவேன் என்கிறார். மறுமுனையில் ஜேவிபி ‘மக்களுக்கு நல்வாழ்வு’ என்ற திட்டத்தை முன்மொழிந்துள்ளது. ஆனால் எனது ஆட்சியில்தான் மக்கள் நல்வாழ்வை உணர்துகொண்டிருந்தனர்.

ஜேவிபி முன்வைத்துள்ள வரவு செலவு திட்ட யோசனையும் முரண்பாடுகள் நிறைந்ததாக காணப்படுகிறது. வருமானத்தை பெருக்குவதற்கான வழிமுறைகள் அதில் இல்லை.

மக்கள் கஷ்டம் புரியாதவர்களிடம் எப்படி ஆட்சியை கொடுப்பது. மக்கள் மீது கஷ்டத்தை சுமத்தவே அனுர முயற்சிக்கிறார்.

கேள்வி கேட்கும்போது பாய்ந்தோடுகிறார்கள். எனவே, சிலிண்டருக்கு வாக்களியுங்கள்.
இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது ரூபாவும் வலுவடையாது” இவ்வாறு ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment