TamilsGuide

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சி முன்னுதாரணமான அரசாட்சியாகத் திகழும்

”பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத, முன்னுதாரணமான அரசாட்சி ஒன்று கட்டியெழுப்பப்படுமென” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மிஹிந்தலை பிரகடனம் வெளியீட்டு வைபவம் நேற்றைய (02) தினம் மிஹிந்தலை ரஜ மஹா விஹாராதிபதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மகா சங்கரத்தினருக்கு மத்தியில் மிஹிந்தலை நகரில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நான் அதிகாரத்திற்கு வந்த பிறகு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை தன்னிச்சையாக பயன்படுத்தப் போவதில்லை. இது பதவி அல்ல. மக்களின் சேவகனாக நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவேன்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்த விதத்திலும் மக்களுக்கு சுமையாக இருக்காது. ஒரு முன்னுதாரணமான அரசாட்சி ஒன்று நடத்தப்படும். மக்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவதற்கு முன்னர் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

தசராஜ தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு முன்மாதிரியான பணிவான செவிசாய்க்கக்கூடிய அரசாட்சி ஒன்று எமது நாட்டுக்குத் தேவை. அதற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment