TamilsGuide

நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா மீது பாலியல் வழக்கு - மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு-போராட்டம்

மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்து வரும் பாலியல் துன்புறுத் தல்கள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷனின் அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

அதில் மலையாள திரை உலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் வெட்டவெளிச்சத்துக்கு வந்தது.

மேலும் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

அவர்கள் மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினர்.

அதன்பேரில் விசாரணை நடத்த டி.ஐ.ஜி. அஜிதா பீகம், போலீஸ் சூப்பிரண்டுகள் பூங்குழலி, மெரின், ஐஸ்வர்யா ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை கேரள அரசு நியமித்தது.

அந்த குழுவினர் நேரடி விசாரணையை தொடங்கி உள்ளனர். அவர்களிடம் நடிகர்கள் உள்ளிட்டோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிய நடிகைகள் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

அதன்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் சிறப்பு விசாரணை குழு ஈடுபட்டு வருகிறது.

பாலியல் புகார்கள் தொடர்பாக நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர்கள் மேல் மேலும் பல நடிகைகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகர் முகேஷ் மீது கொச்சியை சேர்ந்த கவர்ச்சி நடிகை மினு பாலியல் புகார் கூறியிருக்கிறார். இதனால் அவருக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்கள் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது வீட்டை நேற்று 2-வது நாளாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

மேலும் அந்த கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் அமைப்புகளை சேர்ந்த 100 பெண்கள் கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், அந்த பதவியில் இருந்து அவரை நீக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் கவர்ச்சி நடிகை புகாரின் பேரில் முகேஷ் எம்.எல்.ஏ. மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டுள்ளது.

முகேஷை தவிர நடிகையின் புகாரின் பேரில் நடிகர் மணியன்பிள்ளை ராஜூ, முன்னாள் பொதுச் செயலாளர் ஏவலபாபு ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். 
 

Leave a comment

Comment