TamilsGuide

உடன் அமுலுக்கு வரும் வகையில் தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டதாக ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். எவரேனும் அத்தியாவசிய காரணங்களுக்காக விடுமுறை எடுக்க வேண்டுமாயின், மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி தபால் மா அதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அஞ்சல் வாக்குச் சீட்டுகளை நாளைய தினம் அஞ்சல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 4ஆம், 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் அஞ்சல் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் அடுத்த மாதம் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்களில் வாக்களிக்கப்பதற்கும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment