TamilsGuide

கொட்டுக்காளி எடுத்ததற்காக வினோத்ராஜின் காலை முத்தமிடுவேன் - மிஷ்கின் நெகிழ்ச்சி பேச்சு

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் படக்குழு மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். மேலும் இவ்விழாவில் இயக்குனர் மிஷ்கின், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி கலந்துக் கொண்டனர்.

விழாவில் பேசிய மிஷ்கின் மிகவும் அழகாக , இலக்கிய நயத்தோடு படத்தையும் , படக்குழுவையும், இயக்குனரையும் பாராட்டி பேசினார். அதில் அவர் சொன்ன முக்கியமான விஷயங்கள் சிலவற்றை பார்ப்போம். அதில் அவர்

"இப்படத்தை ஓட வைப்பதற்காக நான் இந்த மேடையில் அம்மணமாக கூட ஆட தயார் . இந்த படத்தை எடுத்த இயக்குனர் வினோத் ராஜ் மிகப் பெரிய நன்றி. இந்த படத்தை எடுத்ததற்காக அவனுடைய காலை கூட முத்தம் இடுவேன். நான் இளையராஜாவிற்கு பிறகு ஒருவனின் காலை முத்தமிடுவேன் என்றால் அது வினோத் ராஜின் காலை தான், சூரி அந்த கதாப்பாத்திரமாவே வாழ்ந்து இருக்கிறான். தமிழ் நடிகைகள் இந்த மாதிரி நல்ல படங்களில் நடிக்க சம்மதிக்க மாட்டார்கள், அன்னா பென்னிற்கு கண்டிப்பாக இந்த வருடம் தேசிய விருது கிடைக்கும் என வாழ்த்துகிறேன். படத்திற்கு பின்னணி இசையே இல்லாமல் படத்தை இயக்கி என்னை செருப்பால் அடித்து விட்டான் இயக்குனர் வினோத்ராஜ். இப்படத்தை தயவு செய்து அனைவரும் சென்று பாருங்கள். எதெற்கோ பணம் செலவு செய்கிறோம் இப்படத்தையும் சென்று பார்க்க வேண்டும் என மக்களிடம் அன்போடு கேட்டுக்கொண்டார்."
 

Leave a comment

Comment