TamilsGuide

தங்கலான் ரிலீசாவதில் சிக்கல் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, தற்பொழுது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. இப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், தங்கலான் படத்தை வெளியிடும் முன் ரூ. 1 கோடி செலுத்த வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பல விஐபிக்கள் பணம் கொடுத்து வைத்துள்ளனர். இவர் அந்த பணத்தை பலரிடம் கடனாக கொடுத்தார். இதில் நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலனவராக அறிவிக்கப்பட்டார்.

மேலும், அவர் உயிரிழந்துவிட்டார். இவரது சொத்துக்களை சென்னை உயர்நீதிமன்றத்திடன் கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து அந்த பணத்தை திருப்பி வாங்கும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆன ஞானவேல் ராஜா மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் கடந்த 2013 ஆம் ஆண்டு ரூ. 10 கோடியே 35 லட்சம் கடன் வாங்யிருந்தனர். இந்த தொகையை வட்டியுடன் திருப்பி கேட்டு சொத்தாட்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டும், ஞானவேல்ராஜா மற்றும் ஈஸ்வரன் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், ஞானவேல்ராஜா மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் திவாலானவர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சொத்தாட்சியர் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அதில் ரூ. 10 கோடியே 35 லட்சம் கடனுக்கு கடந்த 2013 ஆண்டு முதல் 18 சதவீதம் வட்டி, வழக்கறிஞர் கட்டணம் சேர்த்து ரூ. 26 கோடியே 36 லட்சம் வழங்க வேண்டும் என்றும் இந்த தொகையை வழங்காத இவர்களை திவாலனவர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஜி ஜெயசந்திரன் மற்றும் சிவி கார்த்திகேயன் அடங்கிய அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், தங்கலான் படத்தை வெளியிடும் முன் ரூ. 1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் அதன் பின் படத்தை வெளியிடலாம்.

இதே போல் கங்குவா படத்தை வெளியிடும் முன் ரூ. 1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் பணம் செலுத்தியது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
 

Leave a comment

Comment