TamilsGuide

யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது

யாழ்ப்பாணத்தில் ஒன்றரை மாத குழந்தை படுமோசமாகச்  சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தொியவந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தொிவித்துள்ளனா்.

குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால், உட்கூற்று பரிசோதனை இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிந்து இருந்தமை, தலையில் அடிகாயங்கள் காணப்பட்டமை, காதிலும் மெல்லிய கம்பியினால் துளையிட்ட அடையாளங்கள் உள்ளிட்டவற்றுடன், உடலில் கண்டல் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

இதனையடுத்து குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அளவெட்டி பகுதியைச் சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற ஒன்றரை மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பின்னர் குழந்தை அசைவற்று கிடந்ததாக குழந்தையின் தாய் குழந்தையை அளவெட்டி வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை கொண்டு சென்றுள்ளார்.

பின்னா் குழந்தையை அங்கிருந்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு மாற்றிய போது குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தந்தை வெளியூரில் தங்கி இருந்து வேலை செய்வதாகவும், தாயின் பராமரிப்பிலையே குழந்தை இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள தெல்லிப்பளை பொலிஸார் குழந்தையின் தாயாரை பொலிஸ் பாதுகாப்பில் எடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 

Leave a comment

Comment