TamilsGuide

துர்காவிற்கு கிடைத்த அன்பு மக்களால் சாத்தியமானது - துஷாராவின் நெகிழ்ச்சி பதிவு

நடிகர் தனுஷ் அவரது 50 வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி அதில் நடித்து இருந்தார். திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தில் தனுஷுக்கு தங்கையாக நடித்து இருந்தார் துஷாரா விஜயன்.

அவருக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை மிக அழகாகவும் சிறப்பாகவும் நடித்து இருந்தார், இதனால் மக்கள் இவரது கதாப்பாத்திரத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் துர்கா கதாப்பாத்திரத்திற்கு கிடைத்த அங்கீகாரமும் . அன்பும், வெற்றியும் மக்களால் சாத்தியமானது என மக்களுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் துஷாரா. அதில்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் இயக்கிய 'ராயன்' திரைப்படத்திற்கு தாங்கள் அளித்துவரும் ஆதரவிற்கு பெரிய நன்றிகள். என் உழைப்பிற்கு கிடைத்த தங்களின் அன்பும், அரவணைக்கும் வார்த்தைகளும் என் மனதிற்கு நெருக்கமாகவே நிலைத்திருக்கும்.

படத்துவக்கம் முதல் தற்போது மாபெரும் வெற்றிப்படமாக 'ராயன்' உருமாறியிருக்கும் வரையிலான பயணம் மிகப்பெரியது. வெகுசன மக்களிடம் என் கதாபாத்திரம் உட்பட ஏனைய கதாபாத்திரங்களையும் கொண்டு சேர்த்ததிலும் மாபெரும் வெற்றியை உறுதி செய்ததிலும் ஊடகத்தின் பங்கு முக்கியமானது. அதற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

எங்கள் இயக்குனர் தனுசுக்கும். சன் பிக்சர்ஸ் குழுமத்திற்கும் பெரிய, பெரிய நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். 'துர்கா'விற்கு கிடைத்த அங்கீகாரமும், அன்பும், வெற்றியும் மக்களால் சாத்தியமானது என்றால் அது மிகையில்லை. தொடர்ந்து உங்கள் அனைவரையும் மகிழ்விக்க உழைத்துக் கொண்டே இருப்பேன். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் கருத்தில் கொண்டு என் பயணத்தை செழுமைப்படுத்துவேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment