TamilsGuide

தேவையின்றி வெளியில் வராதீங்க - லெபனானில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். அந்த நாளில் இருந்து இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பு போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் சில தினங்களுக்கு முன் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் குழுந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

ஹிஜ்புல்லா அமைப்பு நடத்திய இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் கடுமையாக தாக்கியது. ஹிஜ்புல்லா அமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஹிஜ்புல்லா ராணுவ தளபதி பௌத் சகர் (Fuad Shukr) உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. முன்னதாக கால்பந்து மைதானத்தின் மீது ஹிஜ்புல்லா நடத்திய தாக்குதலுக்கு பௌத் சகர் தலைமை வகித்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

இருதரப்பும் மோதிக் கொள்வதால் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இது தொடர்பான தகவல் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் இடம்பெற்றுள்ளது.

அதில், "பதற்ற சூழல் நிலவி வருவதை அடுத்து லெபனானுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. லெபனானில் உள்ள இந்தியர்கள் ஜாக்கிரதைாகவும், தேவையின்றி பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறும், பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
 

Leave a comment

Comment