TamilsGuide

எளிய தமிழில் கீதோபதேசம் - கண்ணதாசனின் கவிப்புலமைக்கு சான்றான கர்ணன்

பழம்பெரும் தயாரிப்பாளரும், இயக்குநருமான மறைந்த பிஆர் பந்துலு, மகாபாரதக் காவியத்தின் நாயகர்களில் ஒருவரான “கர்ணன்” பற்றிய சிறப்பினை வலியுறுத்தும் விதமாக, அதிக பொருட் செலவில், மிகப் பிரமாண்டமாக எடுத்த திரைப்படம்தான் “கர்ணன்”.
1964ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்த இத்திரைப்படத்தின் நாயகன் கர்ணனாக சிவாஜி கணேசன் நடிக்க, கண்ணனாக என்டி ராமாராவ், அர்ஜூனனாக முத்துராமன், துரியோதனனாக எஸ்ஏ அசோகன், பீஷ்மராக ஜாவர் சீதாராமன், குந்திதேவியாக எம்வி ராஜம்மா, பானுமதியாக சாவித்திரி, சுபாங்கியாக தேவிகா, திரவுபதியாக ஜெயந்தி மற்றும் எண்ணிலடங்கா துணை நடிகர்களோடு வெளிவந்து, மாபெரும் வெற்றி பெற்றது.
இத்திரைப்படத்தின் இறுதிக் காட்சியான மகாபாரதப் போர் காட்சியில், அர்ஜூனனுக்கு கண்ணன் தரும் கீதோபதேசத்தை காட்சியாக வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான பிஆர் பந்துலு.
பிஆர் பந்துலுவின் விருப்பத்தை அறிந்த படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். காரணம், கீதோபதேசத்தை காட்சிப்படுத்த வேண்டுமென்றால் குறைந்தது 20 நிமிட காட்சியாக எடுக்க வேண்டிய நிலை வரும் என்பதால், படத்தின் நீளம் கருதி, அதை எடுப்பதற்கு சுணக்கம் காட்டி, படக்குழுவினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை கூறி வந்தனர். அப்போது அரங்கிற்குள் நுழைந்த 'மெல்லிசை மன்னர்' எம்எஸ் விஸ்வநாதன், படக்குழவினரின் நிலை அறிந்து விபரம் கேட்க, நிலைமையை எடுத்துக் கூறிய படக்குழுவினரிடம் சற்றும் யோசிக்காமல் எடுத்து விடலாமே என்று எம் எஸ் விஸ்வநாதன் கூறியதைக் கேட்ட படக்குழுவினருக்கு மீண்டும் ஒரு பேரதிர்ச்சி.
இது எவ்வாறு சாத்தியப்படும் என்று எம்எஸ்வி-யிடம் படக்குழுவினர் கேட்க, கவியரசர் கண்ணதாசனிடம் கீதோபதேச காட்சிக்கு பாடல் எழுதி தர சொன்னால் எழுதி தந்து விடப் போகிறார் என்று கூறிய யோசனையின் விளைவுதான், “மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா…” என்ற மகத்தான மகாபாரத கண்ணனின் கீதோபதேசக் காவியப் பாடல், கவியரசரின் கைவண்ணத்தில் உருவாக வழிவகுத்தது.
மகாபாரதப் போரின் போது, அர்ஜூனனுக்கு சாரதியாக இருக்கும் கண்ணனிடம், எதிரே இருக்கும் என் உறவுகளை, என் சொந்தங்களை, என் பங்காளிகளை, என் குருமார்களை எதிர்த்து நான் போரிட வேண்டுமா? போரிட்டு அவர்களை நான் வீழ்த்த வேண்டுமா? என்னால் முடியவே முடியாது என்று கூறி, கையிலிருந்த காண்டீபத்தை கீழிறக்க, அப்போது கண்ணனால் அர்ஜூனனுக்கு தரப்படும் உபதேசம்தான் 'கீதோபதேசம்'.

“மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா…
மரணத்தின் தன்மை சொல்வேன்…
மானிடர் ஆன்மா மரணமெய்தாது…
மறுபடி பிறந்திருக்கும்.
மேனியைக் கொல்வாய்
மேனியைக் கொல்வாய்
வீரத்தில் அதுவும் ஒன்று
நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி
வெந்துதான் தீரும் ஓர் நாள்… ஆ… ஆ…
என்னை அறிந்தாய் எல்லா உயிரும்
எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன் மனது கல் மனதென்றோ
காண்டீபம் நழுவ விட்டாய்
காண்டீபம் நழுவ விட்டாய்
மன்னரும் நானே மக்களும் நானே
மரம் செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்…
துணிந்து நில் தர்மம் வாழ… ஆ…
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்…
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான்
கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக
இக்களமெலாம் சிவக்க வாழ்க… ஆ… ஆ… ஆ…
சமஸ்கிருதத்தில் இருக்கும் கீதோபதேசத்தை, சாமானியனும் அறியும் வண்ணம், சாரல் மழையாய் கொட்டித் தீர்த்த அந்த சாகாவரம் பெற்ற கவிப்பெருமகனின் கவிப்புலமைக்கு இப்பாடல் ஒரு சான்று.

 

தினமலர்

Leave a comment

Comment