TamilsGuide

இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதில் ஆட்சேபனை இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடாத வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற நடைமுறையை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஐக்கிய சேவைகளின் சுற்றறிக்கை ஊடாக வருடாந்த இடமாற்ற அறிவிப்பு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி நேற்று அனைத்து அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிராந்திய செயலாளர்களுக்கு இது தொடர்பான இடமாற்ற சுற்றறிக்கை ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிப்பதற்காக 8,000 அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு பிரதி தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் உத்தியோகபூர்வ தபால் மூல வாக்குகள் மற்றும் விசேட கடிதங்களை விரைவாக விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

Leave a comment

Comment