தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக அடங்காத அசுரன் என்ற பாடல் மிகப் பெரிய வைரல் பாடலாக மாறியுள்ளது.
அதில் வரும் உசுரே நீ தானே என்ற வரிகள் சமூக வலைத்தளங்களில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.
ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியாகி மூன்று நாட்களில் 70 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அவரது எக்ஸ் தளத்தில் படக்குழுவினரை பாராட்டி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் தனுஷ் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார், மிகவும் புத்திசாலித்தனமாக படத்தை இயக்கியுள்ளார். படத்தில் நடித்த எஸ்.ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ் , சந்தீப் கிஷன் மற்றும் படத்தில் நடித்த அனைவரும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஏ.ஆர் ரகுமான் பின்னணி இசை மிகவும் அழகாக இருந்தது, என படக்குழு அனைவருக்கும் வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார்.
இதற்கு சந்தீப் கிஷன் நன்றி தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் மகேஷ் பாபு நம் தமிழ் சினிமாவை பார்த்து விட்டு எந்த ஒரு ஈகோவும் அல்லாமல் பாராட்டுவது என்பது வியப்பளிக்கிறது.