TamilsGuide

ஜனாசா விவகாரம் - சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாட்டிலுள்ள ஒரு இனத்தையும், ஒரு மதத்தையும் இலக்கு வைத்து, அதன் பாரம்பரியங்களுக்கு எதிராக முட்டாள்தனமான முடிவுகளை எடுத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 383 ஆவது நிகழ்வு பாணந்துறை, ஜீலான் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஒரு இனத்தையும், ஒரு மதத்தையும் இலக்கு வைத்து, நாட்டின் ஆட்சியாளர்கள் எடுக்கும் கீழ்த்தரமான முடிவுகளால் குறிப்பிட்டதொரு சமூகத்தினர் பாதிக்கப்பட்டனர்.

அண்மையில் இதற்கு ஆட்சியாளர்கள் மன்னிப்பும் கேட்டனர். நல்ல விடயம் தான். ஆனால் ஒரு இனத்தையும், ஒரு மதத்தையும் குறிவைத்து எடுக்கப்பட்ட அர்த்தமற்ற முடிவுகளால்

பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு, வலுக்கட்டாயமாக தகனம் செய்த கீழ்த்தரமான செயலுக்கான இழப்பீட்டை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும்.

இல்லையேல்  இந்த ஆண்டு இறுதிக்குள் அதனை வழங்க நான் நடவடிக்கை எடுப்பேன். முட்டாள்தனமான முடிவுகளை எடுத்தவர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

ஸ்மார்ட் சமூகம் இவ்வாறான முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கும் குடிமக்களை உருவாக்காது. பாலஸ்தீன மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையில் தெளிவான நிலைப்பாட்டில் நான் இருக்கிறேன்.

இஸ்ரேலும் பாலஸ்தீனும் நல்லிணக்கத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும்.

பாலஸ்தீன மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் இழிவான செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

மனித நேயத்திற்கு முதலிடம் வழங்க வேண்டும். அதன் மூலம் உலக சமாதானத்தை ஏற்படுத்த முடியும்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


 

Leave a comment

Comment